தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
பெண் நலம் போற்றிய பெருந்தகை சிறப்புப்பார்வை
சி. சிதம்பரம்  
தமிழக வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பல புதியத் தடங்களை ஏற்படுத்திய தமிழ் அறிஞர்களில் முதன்மை஡னவர் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் ''நாவல்'' என்ற புதிய இலக்கிய வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றவர். திருச்சியை அடுத்துள்ள குளத்தூரில் பிறந்த இவர் தமிழ் அறிஞர் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் தம் காலடியைப் பதித்தவர். நாவல்களைப் படைப்பதிலும், சட்டத்துறையைத் தமிழ்ப்படுததுவதிலும், பெண்மையைப் போற்றுவதிலும், தமிழ் வழிக்கல்வியை வலியுறுத்துவதிலும், தமிழ் இசையை வளர்ப்பதிலும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும், நகைச்சுவையைப் பரப்புவதிலும் முன்னோடியாக விளங்கியவர் வேதநாயகம் பிள்ளை.

தமிழுக்கு வழங்கிய கொடைகள்

தமிழ்மொழி வளர வேண்டுமானால் அதில் சிறந்த உரைநடை நூல்கள் தோன்றிப்பெருக வேண்டும் என்பது வேதநாயகரின் கருத்து. எனவே தான் அவர் பிரதாபமுதலியார் சரித்திரம், சுகுன சுந்தரி சரித்திரம், சித்தாந்த சங்கிரகம், பெண் கல்வி, பெண் மனம் என்று ஐந்து உரைநடை நூல்களைத் தமிழுக்காக வழங்கியுள்ளார். தமிழ் மொழியில் புதினம் இல்லாத குறையை அவர் உணர்ந்ததால் பிரதாபமுதலியார் சரித்திரத்தை எழுதினார். தமிழக வழக்குமன்றங்கள் அவர் காலத்தில் ஆங்கிலத்திலேயே நடைபெற்றன. வழக்குமன்றங்களும், தீர்ப்பு வழங்குவோரும், தமிழர்களே! எனவே சட்டத்துறையை தமிழ்ப்படுத்தும் முயற்சியாக 1850-1861 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழ்மொழியில் மொழிபெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலை வெளியிட்டார். தமிழகத்தில் பெண்மையின் மகத்துவத்தை அறிந்த வேதநாயகர் பெண்மதிமாலை, பெண் கல்வி, பெண்மானம் போன்ற நூல்களை எழுதினார்.

இதுதவிர சர்வ சமயக்கீர்த்தனைகள், நீதிநூல் போன்ற தனது பிற நூல்களிலும்கூட பெண்ணின் மேன்மைகளை விளக்குகிறார். தேவமாதா அந்தாதி, திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவதோத்திர மாலை, பெரியநாயகி அம்மன் பதிகம் ஆகிய சமய நூல்களைநயும் தமிழுக்காக வழங்கிச் சிறப்புச் செய்துள்ளார்.

பெண்ணின் பெருமை

பெண்களின் முன்னேற்றத்திற்காக முதன் முதலில் குரல் எழுப்பியவர் மாயூரம் நீதிபதி வேதநாயகம் பிள்ளை ஆவார். இவர் தாம் இயற்றிய பெரும்பாலான நூல்களில் பெண்களின் நலனுக்காகக் குரல் கொடுக்கிறார். மேலும் இரண்டு நாவல்களிலும் பெண்களை மையப்படுத்தியே எழுதியுள்ளார். இரு நாவல்களிலுமே கதைத் தலைவர்களைவிட, கதை தலைவியர்களைச் சிறந்தவர்களாகச் சித்தரித்த விதம் பெண்களிடத்தே வேதநாயகம் கொண்ட உயர்வையும் நமபிக்கைநயும் புலப்டுத்துகிறது. இராகத்துடன் பாடக்கூடிய அமைப்பினைக் கொண்ட சர்வ சமயக் கீர்த்தனைகளில் கூட, ஒரு நல்ல பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறத்துகிறார். பெண்கள் தங்களைப் படிக்க வைக்கும்படித் தந்தையை வேண்டுவதாக உள்ள பகுதி பெண்கல்வி குறிந்த சிந்தனையை பெண்களிடத்தே தூண்டுகிறது.

ஒரு பெண்ணுக்கு இயற்கையான அழகே போதுமானது. பெண்கள் செயற்கையாக அலங்காரம் செய்ய வேண்டியதில்லை என்பது வேதநாயகரின் கருத்து. அலங்காரம் கணவனை ஈர்ப்பதாக மட்டுமே இருக்கவேண்டும் என நீதிநூலில் வலியுறுத்துகிறார்.

'கற்பு நிலை' என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாயினும் பெண்ணடிமைச் சமுதாயத்தில் அது பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்பட்டுளளது. ''கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை'' எனத் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. எனவே தான் வேதநாயகர் ''பெண்கள் கண்ணாடியைப் போன்றவர்கள்; ஆண்கள் கல்லைப்போன்றவர்கள்; கண்ணாடி கல்லுடன் மோதினாலும், கல் கண்ணாடியுடன் மோதினாலும் ஆபத்து கண்ணாடிக்குத்தான்'' என்று கூறுகிறார். ''கணவன் உண்டு உறங்கிய பின்பு தான் உண்டு உறங்குதலும், கணவன் எழுமுன் எழுந்து வேண்டுவன செய்தலும் கடனாகக் கொண்டவள் கற்புடையாள்'' என்று கற்புடைமைக்கு எளிமையாக இலக்கணம் வகுக்கிறார்.

ஒரு பெண் தன் கற்பை இழப்பதினால் ஏற்படும் தீமைகளை நீதிநூல் வாயிலாக விளக்குகிறார். கற்பிலிருந்து இழிந்தவர் யாராயினும் அவர்களைப் பரத்தையராகவே கருதுகிறார்.

பிற ஆடவர்களுடன் சேர்பவள், பல பேர்களுக்குத் தீமை செய்கிறாள். அவள் தன்னையும் கெடுத்து, பிற ஆடவரையும் கெடுக்கிறாள். சொந்தக் கணவனுக்குத் துரோகம் செய்பவளாகவும், பிற ஆடவனுடைய மனைவிக்கு வஞ்சகியாகவும் மாறுகிறாள். இதன் விளைவாகவே உலகை உலுக்கும் பால்வினை நோய்கள் (H.I.V) போன்றவைகள் பரவுகின்றன.

கற்பு நிலை கெட்ட ஒரு பெண் தன்னுடைய கணவன், உற்றார், பெற்றோர் முதலியோர்க்கு மாறாத பழியையும், இழிவையும் உண்டாக்குகிறாள்.

பெண் செய்த குற்றத்திற்காக இந்த ஒழுங்கற்ற உலகமானது அவளுடைய கணவனையும், பிள்ளைகளையும் இழிவு படுத்திக் குற்றமற்றவர்களையும் வெறுத்து ஒதுக்குகிறது.

பிற ஆடவனால் உண்டாகின்ற கருவை அழிப்பதற்கு பெண்கள் பலவகை மருந்துகளை உண்டு, கொலைத் தீமையையும் புரிகின்றனர். எனவே, ஒருமுறை அயலவனைச் சேர்வதால் கிடைக்கும் சுகத்தால் பல ஆடவர்களைச் சேர்த்து அதன் மூலம் பொருள் தேடவும் துணிகிறாள்.

நாட்டில் நடைபெறும் கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும், சண்டைகளுக்கும் இந்த ஒழுக்கமற்ற போக்கே காரணம் என்று ஒரு பெண்ணின் கற்புக் கெடுவதால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிடுகிறார். பெண்ணின் பெருமையைப் பேசும் வேதநாயகம் அதே நேரத்தில் கற்பிலிருந்து தவறிய இழிமகளரின் புன்மையையும் புலப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண் தன் முழுமையான பெண்மையை அடைவது அவளது தாய்மையின் போதுதான் என பெண்மை போற்றும் தாய்மையின் மேன்மையையும் விளக்குகிறார்.

பெண் கல்வி

வேதநாயகர் தாம் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதை வன்நமையாகக் கண்டிக்கிறார். 'கற்பு' என்ற சொல்லுக்கே கல்வி என்பது தான் பொருளாகும். எனவே பெண்களுக்குக் கற்பு வேண்டுமானால் கல்வி வேண்டும் என்பது விளங்குகிறது என்று புதிய விளக்கம் கூறி பெண்களுக்குக் கற்பு மட்டுமே வேண்டும் கல்வி வேண்டாமென்று கூறும் தன்னலவாதிகளுக்கு சவுக்கடி கொடுக்கிறார். பெண்கள் படிக்கக்கூடாது என வாதம் செய்பவர்களை நோக்கி, சங்க காலம் தொட்டு பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கியதற்கான சான்றுகளையும் அடுக்கிச் சொல்கிறார். மேலும் ஒரு பெண் கல்வி கற்பதினால் ஏற்படும் நன்மைகளையும், கற்காததால் ஏற்படும் தீமைகளையும் விளக்குகிறார். அந்தக் கல்வியும் தமிழ்வழிக் கல்வியாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

பெண் உரிமை

வேதநாயகம் பிள்ளை பெண்ணுரிமைக்கு எதிராகச் செயல்படும் சக்திகளைக் கடுமையாக சாடுகிறார். மாமியார் கொடுமை, கணவன் மனைவியை அடித்தல், வரதட்சணைக் கொடுமை, பொருந்தாத் திருமணம், கைம்மை நோன்பு (விதவைக் கொடுமை) போன்றவற்றையும் வன்மையாகக் கண்டிக்கிறார்.

கைம்பெண்களுக்கு மறுமணம் செய்வது பற்றிய சிந்தனை வேதநாயகத்திடம் இல்லை. ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்காகச் சொத்து சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறார். ஒவ்வொரு கணவனும் தன் மனைவிக்காகத் தனியாகப் பணம் சேமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இவ்வாறு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைச் சுட்டிக்காட்டும் வேதநாயகர் அக்கொடுமைகள் நீங்கத் தம் படைப்புகளில் அக்காலத்தில் வழக்கில் இருந்த மணிப்பிரவாள நடையில் பெண்ணுரிமை சிறக்க வழிகாட்டுகிறார்.

பெண்கள் குறித்து வேதநாயகம் கண்ட கனவு ஒரளவிற்கு நனவாகியுள்ள நிலையில், தமிழ் வழிக்கல்வி இன்னும் கனவாகவே உள்ளது. ஒவ்வொரு துறையிலும் தமிழ்ப்படுத்த வேண்டிய பணி தொடர்ந்தால் வேதநாயகம் பிள்ளையின் கனவு மெய்ப்படும் என்பது உறுதி .

சி. சிதம்பரம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி

தொகுப்பு Published on 6th Feb, 2008
 


மேலும்