தென்னாப்பிரிக்காவிலிருந்து
இந்தியா திரும்பிய அண்ணல் காந்தியடிகள், காங்கிரஸ்
கட்சியினரால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்,
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புதியதோர் திருப்பு
முனை ஏற்பட்டது. காந்தியடிகள் அந்நியராட்சியை
எதிர்க்கப் பொது மக்களை ஒன்று திரட்டி, அவர்கள் ஆதரவோடு
பல போராட்டங்களை நடத்தினார்.- தனி நபர்
சத்தியாக்கிரகம்
- உப்புச் சத்தியாக்கிரகம்
- உண்ணா விரத அறப்போர்
என்று அடுக்கடுக்காக அவர் நடத்திய போராட்டங்களில்
முக்கியமான ஒன்று சுதேசி இயக்கம்.
பொதுமக்கள் அந்நிய நாட்டுப் பொருள்களை வாங்கக்
கூடாது, அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும்.
உள்நாட்டின் உற்பத்திப் பொருள்களையே வாங்கி உபயோகிக்க
வேண்டும் என்பது அண்ணல் காந்தியடிகளால் உருவாக்கப்பட்ட
சுதேசி இயக்கத்தின் உன்னத நோக்கம்.
அன்று இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் பரவியது.
நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பொதுமக்களும்
காங்கிரஸ்காரர்களும், தங்கள் வீட்டில் இருந்த அந்நிய
நாட்டுத் துணிகளை வீதியிலே கொண்டு வந்து போட்டுக்
கொளுத்தினார்கள்.
அப்போது -
தமிழகத்திலும் அந்தப் போராட்டம் வெகுஜன இயக்கமாக
வீறுகொண்டு எழுந்தது.
இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் என்றால் அந்நிய
நாட்டுப் பொருள்களை பகிஷ்கரிப்பது - அதன் அடையாளமாக
அந்நியத் துணிகளுக்கு எரியூட்டுவது என்ற அளவிலேயே
அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பின்னாளில்
- வெள்ளையர் அரசின் ராஜத் துரோகக் குற்றச்சாட்டுக்கு
ஆளாகி - வெள்ளையர் நீதிமன்றத்தால் இரண்டு ஆயுள்
தண்டனைகள் விதிக்கப்பெற்ற வ.உ. சிதம்பரம் பிள்ளை
மட்டும் - சுதேசி இயக்கம் என்றால், அது விதேசிப்
பொருள்களைப் புறக்கணிப்பது மட்டுமல்ல, சுதேசி என்ற
அடிப்படையில் அந்நியர்களுக்குப் போட்டியாக உற்பத்திக்
கேந்திரங்களை உருவாக்குதல் - அந்நியர்களுக்குப்
போட்டியாக வர்த்தக நிறுவனங்களை நடத்துதல் என்று நாட்டு
மக்களுக்கு - அந்த இயக்கத்தின் இன்னொரு பக்கத்தை -
அணுகுமுறையை - அடையாளம் காட்ட முயற்சித்தார். தனது
சொத்தையே பணயம் வைத்து - வெள்ளைக்காரர்களின் கப்பல்
கம்பெனிகளுக்குப் போட்டியாக, சுதேசிக் கப்பல் கம்பெனி
ஒன்றினை உருவாக்கினார்.
வ.உ.சி. யின் துணிச்சலும், நாட்டுப் பற்றும் ஏற்கனவே
நாடு முழுவதிலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த
சுதேசி இயக்கத்தை, முன்னைவிட பலம் வாய்ந்ததாக்கியது.
பல்வேறு காரணங்களால், வ.உ.சி. யின் கப்பல் நிறுவனம்
லாபகரமாக நடைபெற முடியாமல் போயிற்று. நட்டத்தில்
மூழ்கியது என்றாலும், நாட்டுக்காக, எதையும்
எல்லாவற்றையும் இழக்கலாம்; சர்வ பரித்தியாகம் செய்து
எல்லோருக்கும் வழி காட்டலாம்; வாழ்ந்து காட்ட முடியும்
என்று அதன் மூலம் நிரூபித்தார் அவர். வரலாற்றில் 'கப்பலோட்டிய
தமிழர்' என்று பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் இறவாப்
புகழையும் எய்தினார்.
சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரே 'குற்ற'த்திற்காக
ஏக காலத்தில் இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப் பெற்று
சிறையில் அடைக்கப்பட்ட அவர், சிறையில் பட்ட கொடுமைகளும்
கொஞ்ச நஞ்சமல்ல. 'செக்கிழுத்த சிதம்பரனார்' என்று நாடு
முழுவதும் அறிமுகம் ஆகும் அளவிற்கு, சிறையில் பல
சித்திரவதைகளையும் அனுபவித்தார்.
அன்று அவர் செய்த தியாகங்களால், அவரது வாழ்நாளின்
இறுதிக் காலம் துன்ப துயரங்கள் நிறைந்ததாகவே ஆயிற்று.
ஆனாலும், அன்று சிதம்பரனார் போன்றோர் செய்த
தியாகங்களால் இந்திய மக்கள், சுதந்திரம் பெற்று, அதன்
பொன்விழாவையும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்!
வ.உ.சி. யின் புகழ் வரலாற்றில் நிலைத்து இருக்கிறது.
ஆனால் அவர் பெற்றுத் தந்த சுதந்திரத்தின் பயனை
அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்கள் எல்லோரது
நெஞ்சிலும் அவரது நிநனவாவது - நன்றியுணர்வோடு இழையோடிக்
கொண்டிருக்கிறதா?. |