மகாகவி
பாரதியாரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு பிரம்ம கான சபா
சென்னையில் 'பாரதி போற்றிய சான்றோர்கள் : சில பார்வைகள்' மற்றும் 'கால
வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' என்ற இருநூல் வெளியீட்டு
விழா நிகழ்ச்சி ஒன்றினை கடந்த செவ்வாய்கிழமை (11.12.2007) நடத்தியது.
நூல்வெளியீட்டு விழா சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ
உட்லண்ட்ஸ் ஹோட்டலில் அன்று மாலை 6 மணிக்கு பாரதியின் பாடலுடன்
தொடங்கியது. பிரபல கர்நாடக பாடகி திருமதி செளம்யா அவர்களின் இன்னிசை
குரலில் பாரதியாரின் பாடல்கள், விழாவிற்கு வந்திருந்தவர்களை
பரவசப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர்
திரு. ஏ. நடராஜன் அவர்கள் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று பேசினார்.
தொடர்ந்து பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்
எழுதிய 'பாரதி போற்றிய சான்றோர்கள்; சில பார்வைகள்' மற்றும் திரு.
சீனி, விசுவநாதன் அவர்கள் பதிப்பித்த 'கால வரிசைப்படுத்தப்பட்ட
பாரதி படைப்புகள்' (எட்டாம் தொகுதி) ஆகிய நூல்களை பேராசிரியர் திரு.
சாலமன் பாப்பையா அவர்கள் வெளியீட, நூல்களை தினமணி நாளிதழின்
ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக நூல்களை வெளியிட்ட சாலமன் பாப்பையா அவர்கள் பேசுகையில்,
''இன்று வெளியிடப்பட்ட நூல்களின் மூலம் ஒருவர் பாரதியைப் பற்றி
நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். பாரதியின் பரிணாம வளர்ச்சி
மிக அருமையாக இந்நூலில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும்
இந்நூல்களில் வரலாற்று தகவல்கள் திட்டவட்டமாகத் தேதியுடன்
குறிப்பிட்டுள்ளார்கள். சங்ககாலம் முதல் தொகுத்தவர்கள் மற்றும்
தொகுப்பித்தவர்களால் தான் இன்றும் தமிழ் வாழ்கிறது...'' என்று
சிலாகித்துப் பேசினார்.
மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில், ''அந்த வரிசையில் நல்லி
குப்புசாமி செட்டியார் தொகுப்பித்து, தமிழ் ஆர்வலர் சீனி.
விசுவநாதன் பாரதியின் கவிதைகளை கால வரிசைப்படுத்தி
தொகுத்திருக்கிறார். பாரதியின் புகழ் வாழும் காலம் மட்டும் இவர்கள்
இருவரும் வாழ்வார்கள்..'' என்று குறிப்பிட்டது சிறப்பு.
பின்னர்
நூல்களைப் பெற்றுக் கொண்ட தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பேச
அழைக்கப்பட்டார். பாரதியின் நினைவு நாளில் 'தினமணி' நாளிதழ்
தொடங்கப்பட்டதை தனது பேச்சில் குறிப்பிட்ட ஆசிரியர், அப்படிப்பட்ட
நாளில் பாரதி தொடர்புடைய விழாவில் 'தினமணி' ஆசிரியர் என்ற முறையில்
கலந்து கொள்வதற்கு தனக்கு உரிமை உண்டு என்றும், அதில் பெருமையும்
உண்டு என்றும் குறிப்பிட்டு பேசியது சிறப்பு.
தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் பாரதி இருந்தார் என்பதற்கான
அடையாளமாக அவர் காவலில் வைக்கப்பட்டிருந்த அறையில் அறிவிப்புப்
பலகையாவது வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றினையும் வைத்தது
குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு பிரபல ஜவுளி நிறுவன உரிமையாளர் டாக்டர் நல்லி
குப்புசாமி செட்டியார் அவர்கள் பாரதியார் பற்றியும், நூல்கள்
பற்றியும் சிறப்புரையாற்ற வந்தார். பாரதியின் படைப்புகள் இதுவரை 8
தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் 3 அல்லது 4 தொகுதிகள் வர வேண்டும்
என்று பேசிய நல்லி அவர்கள், பாரதிக்கு மிகப் பெரிய சேவை செய்த 'தினமணி'
நாளிதழினை நினைவுகூர்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 'கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' நூலாசரியர்
சீனி. விசுவநாதன் ஏற்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து அன்று விழா
சுவையான தலைவாழை விருந்துடன் முடிவடைந்தது சிறப்பு.