For Tamil Fonts
 அஞ்சலி
 சிறப்புப்பார்வை
 சிறப்புக் கட்டுரை
 அரசியல்
 சமூகம்
 இலக்கியம்
 கலை
 ஆன்மீகம்
 இயற்கை மருத்துவம்
 நேர்காணல்
 விருந்தினர் பக்கம்
 திட்டிவாசல்
 சினிமா சினிமா
 முகப்பு
 கடந்த பகுதிகள்



தெற்காசிய நாடுகளின் பெண்குழந்தைகள்
பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்ததும் பெரும்பாலானவர்களின் முகம் வாடித்தான் போகிறது. பெற்ற தாயே தன் குழந்தையைக் கொல்லத் துணிகிறாள் என்றால், சமூகத்தில் பெண் பிள்ளைகளின் மதிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

கருப்பு சூரியன்
வங்காளத்தில் ஆஷா பூர்ணாதேவி
தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி, புவனா நடராஜன்
 

ஆஷா பூர்ணாதேவி

வங்காளத்தின் சமகால எழுத்தாளர்களில் தலைசிறந்தவரான ஆஷாபூர்ணாதேவி 1909-ம் ஆண்டில் கல்கத்தாவில் பிறந்தார். கல்வியிலும் எழுத்திலும் தாயிடமிருந்து உந்துதல் பெற்றார். வீட்டிலேயே கல்வி கற்றார். பள்ளிப்படிப்பு பெறவில்லை.

இவரது 13-ம் வயதில் சிறுவர்களுக்கான கவிதை ஒன்று இயற்றினார். அது முதல் இவரது படைப்புப் பணி தொடர்ந்து வருகிறது. இவருடைய படைப்புகளின் அளவு, வீச்சு, தரம் எல்லாமே வியக்க வைப்பவை. இவரது இளம் பருவத்திலேயே சிதைந்து போகத் துவங்கிய வங்காளிக் கூட்டுக் குடும்பத்தின் பிரச்சினைகளை இவ்வளவு துல்லியமாகவும் அனுதாபத்துடனும் வேறெந்த எழுத்தாளரும் சித்தரிக்கவில்லை. இவருடைய படைப்புகளில் பெண்களின் பிரச்சினைகள் மட்டுமின்றி சமகால வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினைகளும் கையாளப்பட்டுள்ளன.

இதுவரை சுமார் 176 நாவல்கள், 30 சிறுகதைத் தொகுப்புகள், 47 குழந்தை இலக்கிய நூல்கள், 25 மற்ற படைப்புகள் வெளிவந்துள்ளன. மேலும் இவற்றில் 63 நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரின் கருப்பு சூரியன் குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் ஒன்று.

கருப்பு சூரியன

என் பெரியண்ணாவுக்கு இரண்டு பெண்கள். இருவருக்குமிடையே ஆகாயத்திற்கும் பாதாளத்திற்குமுள்ள வேற்றுமை.

இருவரும் சொந்த அக்கா தங்கைதான். இருவருக்குமிடையே வயது வித்தியாசமும் பதின்மூன்று மாதங்கள்தான். இருவரையும் பார்த்தால் அவர்களை ஒரே பிரம்மாதான் படைத்தாரென்று நம்ப இயலாது.

என்ன நிகழ்ந்திருக்க வேண்டுமென்றால் பெரியவளைப் படைத்தபின் பிரும்மா லீவில் போயிருப்பார். அவரது இடத்தில் வேறொருவர் 'ஆக்டிங்'காக நியமிக்கப்பட்டு இருப்பார். போதிய அனுபவமோ திறமையோ அற்ற 'ஆக்டிங்' பிரும்மா சிறியவளைப் படைத்திருப்பார்.

என் சின்ன அண்ணி பெரிய அண்ணியிடம் சொல்லுவாள் ''பெரியவ பொறந்தப்பறம் நீ உடம்பு தேறணும்னு நிறைய டானிக் குடிச்சியே, அது உண்மைலே தாரோட எஸ்ஸென்சாயிருந்திருக்கணும். அதுதான் இந்தமாதிரி அட்டைக்கரியா ஒரு பொண்ணு பொறந்திருக்கு உனக்கு''

இரண்டு பெண்களுக்கும் பொருத்தமாகப் பெயர் வைத்தம் சின்ன அண்ணிதான். பெரியவள் பெயர் மல்லிகா, சிறியவர் பெயர் கேண்ட்டு (மணமற்ற ஒருவகைக் காட்டுப் பூவின் பெயர் கேண்ட்டு).

வயதில் சிறியவளாயினும் கேண்ட்டுதான் பார்ப்பதற்குப் பெரியவளாகத் தோன்றுவாள். பெரியதலை, நீளமான கைகால்கள், சதுரமான தோள்பட்டை, தட்டை முகம், அதில் பெண்மையின் நளினம் சற்றுமில்லை.

காளி மாதிரி ஒரு கூடை தலைமுடி இல்லாவிட்டால் அவள் பெண்ணுடையணிந்த ஓர் ஆண் பிள்ளை என்றுதான் நினைப்பார்கள்.

அவளுக்கு நேர் மாறாக ஒற்றை நாடி உடம்பு மல்லிகாவுக்கு. ரோஜாநிறம். பார்த்தால் வெள்ளைக்கார பொம்மை மாதிரி இருப்பாள். நீண்ட கண்கள். கூர்மையான மூக்கு. மெல்லிய உதடுகள், கன்னம் மட்டும் சற்று உப்பியிருக்கும். அது மேட்டுக் குடிக்கேற்ற உப்பல். அவளது நடையுடை பாவனைகளும் அவளது மேட்டுக் குடிப் பிறப்பை பறைசாற்றின.

எங்கள் அக்காமார்கள், மல்லிகாவைப் போலில்லா விட்டாலும் அழகிகள் தாம். என் அண்ணிகளம் அவ்வாறே. இவர்களுக்கு நடுவில் கேண்ட்டு ஒரு விதி விலக்கு.

சிறு வயதில் இருந்தே மல்லிகா கட்டிலில் உட்கார்ந்து கொண்டு பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவாள். மண்ணைத் தொட மாட்டாள். அவ்வளவு சுத்தம். கேண்ட்டுவோ நாள் முழுவதும் புழுதியில் தான் விளையாடுவாள். தெருப் பையன்களோடு கிட்டிபுள், கோலி விளையாடுவாள், படைபதைக்கும் வெயிலில் மொட்டை மாடியில் பட்டம் விடுவாள்.

என்ன முயன்றும் அவளுடைய முரட்டுத் தனத்தை மாற்ற முடியவில்லை. திட்டு, அடி, அறைக்குள் அடைத்து வைத்தல், பட்டினி போடுதல் போன்ற எல்லாத் தண்டனைகளும் வீண்.

அவளிடம் இதமாகப் பேசியும் பார்த்துவிட்டாள் பெரிய அண்ணி. 'தெருப்பசங்களோடே இப்படி விளையாடாதே கேண்ட்டு' உன் அக்காவோடே போய் விளையாடு'

அலட்சியமாக உதட்டைச் சுழிப்பாள் கேண்ட்டு. 'அக்காவோடேயா? அவளுக்கு என்ன விளையாடத் தெரியும்?'

மல்லிகாவுக்குத்தான் தங்கையுடன் விளையாட இஷ்டமில்லை.

பள்ளி செல்ல தொடங்கிய பின் கேண்ட்டுவின் முரட்டு விளையாட்டுகள் சற்றுக் குறைந்தாலும், முற்றிலும் நின்று விடவில்லை. பள்ளியிலும் அவளைப்பற்றி ஏகப்பட்ட புகார்கள். 'கேண்ட்டு இன்னிக்கு கிளாசிலே ஆறுகாப்ளி தின்னா' 'இன்னிக்கு டீச்சரை எதுத்துப் பேசினா..''

அவள் அடிக்கடி புத்தகத்தைத் தொலைத்து விடுவாள், ஹோம்ஓர்க் செய்வதில்லை. டீச்சர் திட்டினால் காதுகளைப் பொத்திக் கொண்டு உணர்ச்சியில்லாமல் உட்கார்ந்திருப்பாள்...

தங்கையின் லீலைகளால் அவமானப்பட்டுக் குன்றிப் போவாள் மல்லிகா. அவள் அம்மாவிடம் போய் 'எனக்கக் கேண்ட்டுவோட ஒரே ஸ்கூல்லே படிக்கப் பிடிக்கல்லே. ஒண்ணு, அவளை வேறே ஸ்கூல்லே சேர்த்துரு, அல்லது என்னை வேறேஸ்கூல்லுக்கு அனுப்பு' என்றாள.

பள்ளியை மாற்றுவது அவ்வளவு சுலபமான காரியமா?

நல்ல வேளையாக சீக்கிரமே பிரச்னை தீர்த்துவிட்டது. மல்லிகா பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு கல்லூரிக்குப்போய் விட்டாள். கேண்ட்டு ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடங்கள் இருந்து விட்டுக் கடைசியில் ஒருநாள் 'எனக்குப் பள்ளிக்கூடம் பிடிக்கல்லே' என்று சொல்லிப் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டாள். வீட்டில் உட்கார்ந்து கொண்டு கதைப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கினாள்..

மல்லிகா என்ன செய்தாலும் அது நேர்த்தியாக இருக்கும். அவள் தன் பூப்போன்ற விரல்களால் செய்யும் தையல்வேலை கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியாக இருக்கும். நன்றாக ஓவியமும் தீட்டுவாள் அவள். அவள் தீட்டிய ஓவியங்கள், ராதாகிருஷ்ணன், சிவன் - பார்வதி இயற்றை காட்சிகள் வீட்டுச் சுவர்களை அலங்கரித்தன.

மென்கலைகளுக்கும் கேண்ட்டுவின் முரட்டுத் தனத்துக்கும் வெகுதூரம், 'உன் அக்கா எவ்வளவு அழகாப்படம் வரையறா உனக்கு ஒண்ணும் தெரியல்லையே' என்று யாரோ கேண்ட்டுவைக் கேலி செய்த போது அவள் ஏளனமாக உதட்டைப் பிதுக்கி ''ஆமா, சித்திரம் வறையறது பெரீய்ய காரியமாக்கும்..'' என்று சொல்லிவிட்டு, மல்லிகாவின் காகிதம், பென்சில், சித்திரம் தீட்டும் பிரஷ் இவற்றையெடுத்து ஒரு நிமிஷத்தில் ஓர் எருமையின் படத்தை வரைந்து விட்டாள்.

முழு எருமையின் சித்திரமல்ல, எருமையின் தலையும் கழுத்துந்தான். தலையைச் சற்றே குனிந்து கொண்டு ஆக்ரோஷமகப் பாயத் தயாராயிருக்கும் தோற்றம்.

அந்தப் படத்தைப் பார்த்து வீட்டில் பலர் பல விதமாகக் கேலி செய்தார்கள். ''கேண்ட்டுவோட மனப்போக்கை அப்படியே காட்டுது சித்திரம்..'' என்றார் ஒருவர். 'இது கேண்ட்டுவோட ஆத்மாவின் பிரதிபலிப்பு... என்றார் இன்னொருவர். படத்தைக் கிழிச்சு எறிஞ்சடு, இல்லைன்னா எமனோட வாகனந்தான் விரட்டிக்கிட்டு வருதுன்னு நினைச்சுக்குவாங்க'' என்றார் பெரியண்ணா.

கேண்ட்ட ஒரு தடவை உபயோகித்ததில் பென்சில் கூர் மழுங்கிவிட்டது. பிரஷ் வீணாகி விட்டது.

மல்லிகா உரக்கக் கத்தி ஆர்பாட்ம் செய்பவளல்ல. அவள் அமைதியாக ஆனால் அழுத்தமாகத் தங்கையிடம் சொன்னாள், 'நீ இனிமேல் என் ரூமுக்குள்ளே வராதே!''

கல்லூரிக்கு வந்த பிறகு மல்லிகாவுக்கு வீட்டில் படிப்பதற்கு தனியாக ஓர் சிறிய அறை கிடைத்திருக்கிறது. அதை அவள் அழகாக அலங்கரித்து வைத்திருந்தாள்.

கேண்ட்டு சட்டென்று பதிலளித்தாள், 'உன் ரூம் ஆந்தைக் கூடு மாதிரி இருக்கு. அதுக்குள்ளே நான் ஏன் வரேன்?''

எல்லாரையுமே இப்படித்தான் தூக்கியெறிந்து பேசுவாள் கேண்ட்டு. யாரிடமும் மரியாதை இல்லை. பெரியவர்களிடம் அடக்கமாக நடந்து கொள்ளத் தெரியாது அவளுக்கு.

ஆனால் ஒன்று அவளுக்கு என்னிடம் பாசம் உண்டு. பாசந்தான், மரியாதை இல்லை. காரணம் மரியாதை என்ற சொல்லே அவளது அகராதியில் இல்லை.

கேண்ட்டு என்னிடம் சற்று ஒட்டுதலாயிருக்கிறாள் என்பதற்காகப் பெரிய அண்ணியும் என்னிடந்தான் தன் புகார்களைச் சொல்லுவாள். ''இந்தப் பொண்ணு இப்படியே சிரழிஞ்சு போகணுமா? நீங்க ஒருத்தரும் அவளைச் சரிபண்ண முடியாதா?... நீங்க இவ்வளவு புத்தகம் எழுதறீங்க, ஒரு சின்னப் பொண்ணை வழிக்குக் கொண்டு வரத் தெரியல்லியே!''

புத்தகம் எழுதுவதற்கும், ஒரு பெண்ணை வழிக்கு கொண்டு வருவதற்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் பெரிய அண்ணி நான் புத்தகம் எழுதுவதை அடிக்கடி குறிப்பிடுவாள்.

நான் சொன்னேன். ''நான் சில கற்பனைப் பாத்திரங்களை வச்சிக்கிட்டுக் கதை பண்றேன். பிரும்மா படைச்ச உண்மையான மனிதர்களை மாத்தற திறமை எனக்கு இல்லையே, அண்ணி!''

அண்ணி கோபித்துக் கொண்டு சொன்னாள் ''நீங்க வார்த்தைகளை வச்சுக்கிட்டு விளையாடறீங்க. உங்க ரெண்டு அண்ணங்களும் அபூர்வப்பிறவிகள். சீட்டாட உக்காந்துட்டா உலகமே மறந்து போயிடும். அவங்க கிட்டே எப்போ பேசறது? வயசுக்கு வந்த பொண்ணு, நாள் முழுக்க ஊர்ப் பசங்களோட சுத்திக்கிட்டிருக்கா. அவங்களோட கேரம் விளையாடறா, பட்டம் விடறா, எங்கெங்கேயிருந்தோ கதை புத்தகம் வாங்கிக் கிட்டு வந்துபடிக்கிறா... இவளோட எதிர்காலம் என்ன ஆகும்? இருக்கிற அழகுக்கு கல்யாணந்தான் எப்படி நடக்கும்?''

கேண்ட்டுவுக்குக் கல்யாணம் நடக்குமா என்பது பற்றி எனக்கும் சந்தேகம்தான். இருந்தாலும் அண்ணியை சமாதானப்படுத்துவதற்காக ''கலியாணங்கறது பகவான் கையிலே இருக்குன்னு நீங்கதானே சொல்லுவீங்க..'' என்றேன்.

''அது மனுஷாளோட கலியாணத்தைப் பத்தி சொல்றது, மிருகக் காட்சி சாலையிலே இருக்கற மிருகங்களோட கலியாணத்தைப் பத்தி இல்லே..'' என்று சொன்னாள் அண்ணி.

சற்று நேரத்திற்குப்பின் கேண்ட்டூவைப் பார்த்தேன். ''ஏய், எங்கே போயிக்கிட்டிருக்கே?'' அவளை இறுகப் பிடித்துக் கொண்டு கேட்டேன்.

அவள் என் பிடியிலிருந்து தன்னை விடுவித்தக் கொள்ள முயற்சி செய்தவாறு சொன்னாள், ''நான் தபலா கத்துக்கப் போயிக்கிட்டிருக்கேன்...''

நான் திடுக்கிட்டேன், ''தபாலா கத்துக்கவா?... உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா?''

''ஏன் பைத்தியந்தான் தபலா கத்துக்குமா?''

''அதில்லே... பெண் பிள்ளை தபலா வாசிப்பாளா..?..''

''அப்படீன்னா பெண் பிள்ளைங்க என்ன செய்வாங்க?அக்கா மாதிரி 'டெயிங்'னு பூனை ஊளையிடற சத்தம் எழுப்புவாங்களா?''

மல்லிகா ஏதோ தந்தி வாத்தியம் இசைக்க கற்றுக் கொள்கிறாள் போலும்.

''அவ என்ன செஞ்சாலும் வீட்டிலே உக்காந்துக்கிட்டுத் தானே செய்யறா? உன் மாதிரி வெளியே திரியல்லியே! சரி, நீ எங்கே போய்த் தபலா கத்துக்கப் போறே?''

''பிண்ட்டூ வீட்டிலே?''

அவளுடைய பதிலைக் கேட்டு அண்ணி மாதிரி எனக்கும் கவலை வந்துவிட்டது. ''பிண்ட்டு மாதிரி காலிப்பசங்க வீட்டுக்கெல்லாம் நீ போகலாமா?''

''உன்கிட்டே என்ன காலித்தனம் செஞ்சான் பிண்ட்டூ?''

''என் கிட்டே என்ன செய்வான்? நாள்பூராத் திண்ணையிலே உக்காந்துக்கிட்டு வம்பளக்கிறான், சிகரெட் குடிக்கிறான்..''

''சிகரெட் குடிக்கிறானா?'' ஹா ஹா வென்று சிரித்துவிட்டாள் கேண்ட்டு. பிறகு ஏளனமாகச் சொன்னாள், ''ஊசியிலே ஒட்டையிருக்குன்னு கேடிலி பண்ணிச்சாம் சல்லடை!... உங்களிலே யாரு சிகரெட் குடிக்காமே இருக்கீங்க?.. சிகரெட்டைப் பிடிச்சுப் பிடிச்சு உங்க கைவிரல் தடிச்சுப் போச்சு!''

''எங்க வயசென்ன, அன் வயசென்ன?'' கோபமாகக் கேட்டேன்.

''அப்படின்னா நீங்க அவனை விட மோசம்னு அர்த்தம். அவன் முட்டாள், சின்ன வயது, தெரியாமல் செய்யறதை நீங்க பெரியவங்க, படிச்சவங்க தெரிஞ்சே செய்யறீங்க!''

இந்த மாதிரி நேரடித் தாக்குதலால் எரிச்சலடையாமல் இருக்க நான் ஒரு மகாத்மாவா? நான் கோபித்துக் கொண்டு ''இதோ பாரு, நீ தபலா கத்துக்கப் போகக்கூடாது'' என்று அதட்டினேன்.

''சரி போகல்லே'' என்று சொல்லிவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள் கேண்ட்டு.

அவள் என்னை எதிர்த்துப் பேசாததில் எனக்கு ஆச்சரியந்தான். ஆனால், அவள் இப்படி அடங்கிப் போவதில் ஒரு அசெளகரியம். இந்த 'மூடில்' அவள் நல்ல புத்திமதியைக் காதில் போட்டுக் கொள்ள மாட்டாள் என்றாலும் அவளிடம் இதமாகப் பேசினேன். ''நல்ல குடும்பத்துப் பெண் தபால வாசிச்சுக் கேட்டிருக்கியா?''

எரிந்து விழுந்தாள் கேண்ட்டு. ''மறுபடியும் அதைப் பத்தி ஏன் பேசறே? நான்தான் போகலேன்னுட்டேனே?''

''இன்னிக்குப் போகல்லேன்னா, நாளைக்குப் போவே..''

''இல்லே, போகவே மாட்டேன்...''

கேண்ட்டு இப்படி சொன்ன பேச்சைக் கேட்பது ஆச்சரியந்தான். எனக்குச் சற்றுக் கலக்கம் ஏற்பட்டு விட்டது. அவளை சமாதானம் செய்யும் நோக்கத்துடன், ''ஏன் கோவிச்சுக்கறே?'' என்று கேட்டேன்.

''எனகொண்ணும் கோவமில்லே...''

''நீ தபலா கத்துக்கறதை நான் தடுக்கறேங்கறதுக்காக...''

''நீ தடுத்தா நான் கேட்டுடுவேனா?.. எனக்கே தபலா கத்துகறதிலே அவ்வளவு ஆர்வமில்லே.. பொழுது போகல்லே, ஏதாவது செய்யணுமேன்னுதான்...

''மத்த பெண் பிள்ளைங்க என்ன செய்யறாங்க? உன் அக்஡ என்ன செய்யறா? அதை நீ செய்யக் கூடாதா?''

''அவங்கள்ளாம் புத்திசாலிகள்.. படிக்கிறாங்க.. பரீட்சை எழுதறாங்க...''

''நீயும் படியேன்! பிரைவேட்டாப் பரீட்சை எழுதேன்! நீ படிக்கிறதாயிருந்தா நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்.''

''வேண்டாம்ப்பா ஆளை விடு! அவள் கைகூப்பி நமஸ்காரம் செய்தாள்.''

''அப்படின்னா நீ இப்படியே குரங்கா இருப்பியா?... உனக்கு கல்யாணம் ஆகாதுன் உன் அம்மா சொல்றாளே!''

கேண்ட்டு சிரித்தாள். ஆறதா இல்லையான்னு பாரேன்!

எனக்கு 'திக்'கென்றது. இவளுடைய சிரிப்புக்கு என்ன அர்த்தம்? யாராவது சோதாப்பயல் இந்த அசட்டுப் பெண்ணை மயக்கப் பார்க்கிறானா?இவளைக் கலியாணம் பண்ணிக்கிறதா சொல்லி...

நான் அவளுடைய பின்னலைப் பிடித்துக் கொண்டு கேட்டேன், ''உன் பேச்சுக்கு என்ன அர்த்தம்? சொல்லு''

''அர்த்தம் தெரியல்லியா?''

''உன் மாதிரி காளிதேவியை யார் கலியாணம் பண்ணிக்குவான்?''

''பார்த்துக்கிட்டே இரு!''

''அவன் பேரைச் சொல்ல மாட்டியா?''

'சரி, சித்தப்பா, சரி... ஒருநாள் இழுத்துக்கிட்டே வரேன்... ஆனா நீ வீட்டிலே ஒருத்தர்கிட்டேயும் சொல்லக்கூடாது! அவனுக்கு ரொம்பக் கூச்சம்..''

எனக்கு உண்மையிலேயே கவலை ஏற்பட்டுவிட்டது. இது என்ன விபத்து? யாரை நேசிக்கிறாள் கேண்ட்டு?

மல்லிகா காதல் வலையில் சிக்கமாட்டாள். அவள் கண்ணிமானவள். அவள் பி.ஏ. பாஸ் செய்ததுமே வீட்டார் அவளுக்காக ஒரு ராஜகுமாரனைத் தேடிக் கொண்டு வருவார்கள் என்று அவளுக்குத் தெரியும். பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம், கொடுக்கல் வாங்கல் பற்றிய லெளகிகப் பேச்சு, உடம்பில் மஞ்சள் பூசுவது, முடிச்சுப் போடுதல், ஏழு சுற்று என்று படிப்படியாக 'முறைதவறாத' கலியாணம் நடக்கும் அவளுக்கு. அவள் கழுத்தில் மல்லிகை மாலையணிந்து குறிப்பிட்ட நல்ல கணத்தில் தன் புதுக்கணவனுடன் பார்வை பரிமாறிக் கொள்வாள். பிறகு தன் பெட்டகத்தைத் திறந்து இதயத்தை அவனிடம் கொடுப்பாள். கலியாணத்துக்கு முன்னாலேயே காதலால் மனம் உடைந்து போகுமளவுக்கு அவள் அசடல்ல, அவசரக்குடுக்கையும் அல்ல.

மல்லிகாவுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுக்க இரண்டு ஆசிரியர்கள் வருகிறார்கள். ஒருவர் படிப்பு கற்றுத் தருகிறார். மற்றவர் பாட்டுக் கற்றுத் தருகிறார். இருவரும் இளைஞர்கள்தாம், பார்க்கவும் களையாகத் தானிருப்பார்கள். ஆனால் மல்லிகா அவர்களை நிமிர்ந்து கூடப் பார்க்கமாட்டாள். குனிந்த தலை நிமிராமல் பாடல் கேட்பாள், பாட்டுப் பாடுவாள்...

கேண்ட்டுவைப் புரிந்து கொள்வ மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒருவனிடம் காதல் வசப்படுமளவுக்குப் பெண்மை இருக்கிறதா அவளிடம்? யார் அவளைக் காதலிப்பான்?

தெருத்திண்ணைகளில் வம்பு பேசிக் கொண்டு, பட்டம் விட்டுக் கொண்டு, தபலா தட்டிக் கொண்டு திரியும் சோதாப்பயல் யாரோ இவளை மயக்கி இருக்கிறான், இவளை அவனிடம் இருந்து மீட்பது எப்படி?

ஒருநாள் அவளைப் பார்த்துச் சொன்னேன் ''உன் மனசைக் கவர்ந்த ஒரு குரங்கையோ ஆந்தையையோ என் கிட்டே கூட்டிக் கிட்டு வர஧ன்னு சொன்னியே.. ஏன் கூட்டிக்கிட்டு வரல்லே?''

சற்றே சோர்வாகப் பதில் அளித்தாள் கேண்ட்டு..''அவனுக்கு உடம்பு சரியில்லே..''

''என்ன உடம்பு?''

''என்னன்னு தெரியல்லே... அடிக்கடி காய்ச்சல் வருதாம்...''

இதென்ன சங்கடம்! இந்தப் பெண் எங்கே போகிறாள், யாருடன் பழகுகிறாள்?

''அம்மா கிட்டே சொன்னியா?''

''அம்மாகிட்டேயா? அவகிட்டே என்ன சொல்றது?''

''அந்தப் பையனோட விஷயத்தைத்தான்...''

''ஆகா, நீ இப்பத்தான் சுவர்க்கத்தில் இருந்து இறங்கி வந்துருக்கியாக்கும்! உலகத்து வழக்கம் ஒண்ணும் தெரியாதாக்கும்.'' கோபத்தோடு படபடத்தாள் கேண்ட்டு. ''நான் அவனைப் பத்திச் சொன்னா உன் அண்ணி எனக்கு ஸ்வீட் கொடுப்பா, இல்லையா?''

''ஆனா இந்தத் திருட்டுத் தனம் சரியில்லே கேண்ட்டு, தவிர நீ இந்த மாதிரி எல்லாம் ஒளிவு மறைவா ஒண்ணும் செய்ய மாட்டியே!''

அவளது குரலில் மறுபடியும் சோர்வு, ''நான் இஷ்டப்பட்டா இந்த மாதிரி விஷயத்தை மறைச்சு வச்சிருக்கேன்! அவன் என் காலிலே விழுந்து வேண்டிக் கிட்டான். 'வீட்டிலே சொல்லிடாதே! சொன்னா உன்னை வெளியே வரவிட மாட்டாங்க. நாம சந்திக்க முடியாது'ன்னு. அவன் உடம்பு சரியானதும் எனைக் கூட்டிக்கிட்டு எங்கேயாவது போய்க் கலியாணம் பண்ணிக்கறதாச் சொல்லியிருக்கான்.''

நான் திகைத்துப் போய்விட்டேன். பேசவார்த்தைகள் வரவில்லை எனக்கு. பிறகு சற்றுச் சமாளித்துக் கொண்டு, ''சீ இப்படியெல்லாம் செய்யலாமா ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணு?''

''பின்னே என்ன செய்யறது? நம்ம வீட்டிலே என்னை அவனுக்குக் கலியாணம் பண்ணி வைப்பாங்களா? இந்த வீட்டுக் கெளரவம் என்ன ஆகும்.''

''நம்ம வீட்டுக் கெளரவத்தை நாசம் பண்ணக் கூடிய ஒருத்தனோடே பழகிக் கிட்டிருக்கே!''

''நான் செய்யற எந்தக் காரியத்தாலேதான் உங்க கெளரவம் கெட்டுப் போகாமே இருக்கு? நானும் அக்கா மாதிரி ஒரு மெழுகுப் பொம்மையா இருந்திருந்தா உங்களுக்கு சந்தோஷமாயிருந்திருக்கும்...''

அவளுடைய பேச்சைக் கேட்டு எனக்கு ஒரே ஆச்சரியம். கேண்ட்டுவுக்குத்தன் அக்கா மேல் பொறாமை என்றுதான் நினைத்திருந்தேன். இவ்வளவுதான். அதுதான் இயற்கை. இல்லை, அவள் அக்காவைப் பார்த்து பொறாமைப் படவில்லை. மாறாக அக்காவை அற்பமாக நினைக்கிறாள்!

அது போகட்டும். இப்போது ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்!

''அந்தப் பையனோட விலாசத்தைக் கொடு!''

''கொடுக்கறேன், சித்தப்பா. அவசரப்படாதே. நான் இப்போ மருந்துக் கடைக்குப் போகணும் மருந்து வாங்க..''

''மருந்து வாங்க நீயா போறே?''

''பின்னே யாரு போவாங்க? அவனுக்கு வேலைக்காரங்க இருக்காங்களா?'' என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடிப்போய் விட்டாள் கேண்ட்டு.

அவளைப் பின்தொடர்ந்து போகலாமா என்று யோசித்து முடிவு செய்வதற்குள் அவள் மறைந்து விட்டாள்.

கேண்ட்டு எப்போது எங்கள் குடும்பத்துக் கெளரவத்தைக் குலைக்கப் போகிறாளோ, தெரியவில்லை...

திடீரென்று மல்லிகாவின் கலியாணப் பேச்சு எழுந்து வீடு களை கட்டிவிட்டது.

சின்ன அண்ணியின் மாமா பிள்ளை அமெரிக்காவில் இஞ்சினீயராக இருப்பவன். மூன்று மாத லீவில் வருகிறானாம். மல்லிகாவின் போட்டோ வைப் பார்த்து அவனுக்கு அவளைப் பிடித்து விட்டதாம். அவளைக் கலியாணம் பண்ணிக் கொண்டு கூடவே கூட்டிக் கொண்டு போகப் போகிறானாம்.

மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. வீட்டில் உள்ளவர்களுக்கு. எங்கள் குடும்பத்தில் மல்லிகாதான் முதலில் கல்லூரியில் படித்தவள். கலியாணம் செய்து கொண்டு அமெரிக்கா போகிற முதல் பெண்ணும் அவள்தான்.

இத்தகைய கலியாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்வது லேசான காரியமா? மண மகளின் பெருமைக் கேற்றபடி ஏற்பாடுகள் செய்வதில் செலவு அளவு மீறிப் போய்க் கொண்டிருந்தது. பெரிய அண்ணாவுக்கு அகலக்கால் வைக்க இஷ்டமில்லை. ஆனால் சின்ன அண்ணாவும் பெண்டுகளும் அவருடைய ஆட்சேபத்தை ஊதித்தள்ளி விட்டார்கள்.

சின்ன அண்ணி பெரிய வீட்டுப் பெண். ''பணம் போதல்லேன்னா நான் எங்க வீட்டிலேருந்து கடன் வாங்கித் தரேன். கலியாணத்தை மாப்பிள்ளையோட அந்தஸ்துக்குத் தக்க மாதிரி செய்யுங்க்'' என்று உற்சாகம் அளித்தாள் அவள்.

மல்லிகா பிறந்தது முதல் அவளுடைய அழகைப் பார்த்து வியந்தவர்கள், ''குழந்தை கிளி மாதிரி இருக்கா. இவ கலியாணத்துக்கு ஒரு பைசா செலவாகாது. பசங்க போட்டி. பசங்க போட்டி போட்டுக்கிட்டு இவளைக் கலியாணம் பண்ணிக்க வருவாங்க'' என்றெல்லாம் சொல்வார்கள். இப்போது என்ன வென்றால் இவள் கல்யாணத்திற்கு நான்கு கலியாணச் செலவு ஆகும் போலிருக்கிறது.

வீட்டில் எப்போதும் ஷாப்பிங் பற்றித்தான் பேச்சு. சின்ன அண்ணியின் ஏற்பாட்டில் காசியில் இருந்து பனாரஸ் பட்டுப் புடவையையும் காஷ்மீரில் இருந்து மாப்பிள்ளையின் சூட் துணியும் வரவழைக்கப்பட்டன.

இந்த அமர்க்களத்தில் ஒருவருக்கும் கேண்ட்டுவைப் பற்றிய நினைவே இல்லை. அவள் எப்போது, எங்கே வீட்டை விட்டுப் போகிறாள். எப்போது திரும்புகிறாள். எப்போது சாப்பிடுகிறாள். சாப்பிடுகிறாளா இல்லையா என்பதை யாரும் கவனிக்கவில்லை.

திடீரென்று ஒருநாள் எல்லோரின் கவனமும் அவள் மேல் திரும்பவும் படியாக ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டது.

கலியாணத்துக்கு முதல் நாள்...

சின்ன அண்ணியின் பர்சில் இருந்த பணத்தில் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் காணோம்.

பெரிய அண்ணாவின் பணந்தான். சின்ன அண்ணி ஷாப்பிங் போய்விட்டு வந்து பர்சை தன் அறையில் மேஜை மேலே வைத்திருக்கிறாள். சற்று நேரத்திற்குப் பிறகு பார்த்தால் ஒரு நூறு ரூபாய் நோட்டு குறைகிறது.

இதன் விளைவாக வீட்டில் ஒரே அமர்க்களம். பெண்ணின் கலியாணத்தில் இருபத்தையாயிரம் ரூபாய் செலவாகிறது என்பதற்காக நூறு ரூபாய் போனால் போகிறதென்று விட்டுவிட முடியுமா?

எல்லா இடங்களிலும் தேடியாகி விட்டது. வேலைகாரர்களை நிறுத்தி வைத்து விசாரணை செய்தாகி விட்டது...

இந்த சமயத்தில் அங்கே திடீர்ப் பிரவேசம் செய்தாள் கேண்ட்டு.

அவளது முகம் வற்றிக் கிடந்தது. கண்கள் இடுங்கிப் போயிருந்தன. எண்ணெய் படாத தலைமுடி. ஏற்கனவே அவலட்சணமான கேண்ட்டு இன்னும் குரூபியாகத் தோற்றமளித்தாள்.

''இங்கே என்ன கூட்டம்?''

அவளுடைய தோற்றத்தைப் பார்த்து எரிச்சல் வந்தது பெரிய அண்ணிக்கு ''பத்திரகாளி மாதிரி வந்து நிக்கிறியே! எங்கேயிருந்து வரே?''

''மகானத்திலேருந்து தான்!'' வெடுக்கென்று பதில் வந்தது கேண்ட்டுவிடமிருந்து. பிறகு அவள் என் பக்கம் திரும்பி, ''நான் கேட்டதுக்குப் பதில் சொல்லல்லியே! இங்கே என்ன அமளி?''

நான் விஷயத்தைச் சொன்னேன்.

அவள் வழக்கத்துக்கு விரோதமாக அமைதியான குரலில் கேட்டாள், ''எவ்வளவு ரூபா?''

''நூறு ரூபா..''

''அதுக்காக வேலைக்காரங்களை இம்சை பண்ணவேண்டாம். நான் தான் அந்தப் பணத்தை எடுத்தேன்.''

இடி விழுந்தாற் போல் எல்லோருக்கும் அதிர்ச்சி.

''நீயா எடுத்தே?''

''நீயா?''

''நீ எடுத்திருக்கே! இங்கே எல்லோரும்..''

பெரிய அண்ணி கடுமையாகக் கேட்டாள், ''எதுக்கு எடுத்தே?''

''சொல்ல மாட்டேன்!''

''சொல்ல மாட்டியா? சொல்ல மாட்டியா?.. என்ன திமிர் உனக்கு! சீ, இவ்வளவு மட்டமா ஆயிட்டியா கடைசியிலே திருடக்கூட ஆரம்பிச்சுட்டியா?''

''அப்பா பணந்தானே அது!'' அலட்சியமாகப் பதில் சொன்னாள் கேண்ட்டு.

''ஆகா, ஆர்குமெண்ட் பிரமாதம்! அப்பா பணம்னா சொல்லாமே எடுத்துக்கிறதோ?'' சின்ன அண்ணா கேட்டார்.

கேண்ட்டு சின்ன அண்ணாவைச் சற்றும் பொருட்படுத்தாமல் பெரிய அண்ணாவைப் பார்த்துச் சொன்னாள், ''நான் உனக்கு ஒரு நல்ல பொண்ணாயிருந்தா என் கலியாணத்துக்காகச் செலவு பண்ணுவியா இல்லியா, அந்தக் கணக்கிலே இந்தப் பணத்தைச் சேர்த்திக்கோ..''

இன்னொரு இடி! சொந்த அப்பா கிட்டே என்ன பேச்சுப்பேசுகிறாள் பெண்! கொஞ்சங் கூட வெட்கமில்லை!

கோபந்தாங்காமல் குதித்தாள் பெரிய அண்ணி, ''இந்த மாதிரி அதிகப் பிரசங்கித் தனமாகப் பேசினால் ஆச்சா? அதெல்லாம் நடக்காது! பணத்தைத் திருப்பிக் கொடு!''

''பணம் இல்லே... செலவாயிடுச்சு...''

''செலவாயிடுச்சா? என்ன பண்ணினே அவ்வளவு பணத்தை?''

''சொல்