'''ஆகா
இது உறையூர்தானா?'' என்று பார்த்தவர்கள் ஆச்சரியப்படும்
விதமாகச் சோழ நாட்டின் தலைநகரம் அன்று
அலங்கரிக்கப்பட்டு விளங்கிற்று. பார்ததிப மகாராஜா
போர்க்களத்துக்குப் புறப்பட்ட போது அவருடன் புடை
பெயர்ந்து சென்ற லக்ஷ்மிதேவி மீண்டும் இன்றுதான்
உறையூக்குத் திரும்பி வந்திருக்கிறாள் என்று
சொல்லும்படியாயிருந்தது. உறையூர் வாசிகளிடையே
வெகுகாலத்திற்குப் பிறகு இன்று கலகலப்பும் உற்சாகமும்
காணப்பட்டன. வெளியூர்களிலிருந்து ஜனங்கள் வண்டிகளிலும்,
பலவித வாகனங்களிலும் கால்நடையாகவும் வந்து
கொண்டிருந்தார்கள். வீதிகளில் ஆங்காங்கு ஜனங்கள்
கூட்டமாய் நின்று கிளர்ச்சியுடன் பேசிக்
கொண்டிருந்தார்கள்.
அன்று காஞ்சி நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தி உறையூரில்
பொது ஜன சபை கூட்டுகிறார் என்றும், இதற்காகச் சோழ
நாட்டின் பட்டினங்களிலும் கிராமங்களிலும் உள்ள
பிரமுகர்களை யெல்லாம் அழைத்திருக்கிறார் என்றும்
பிரஸ்தாபமாயிருந்தது. அன்று நடக்கப்போகும் சபையில் பல
அதிசயங்கள் வெளியாகுமென்றும் பல விசேஷ சம்பவங்கள்
நிகழுமென்றும் ஜனங்கள் எதிர்பார்த்தார்கள். அருள்மொழித்
தேவியும், இளவரசர், விக்கிரமரும் உறையூருக்குத்
திரும்பி வந்திருக்கிறார்களென்றும் செய்தி
பரவியிருந்தது. இன்னும் இளவரசர் இரத்தின வியாபாரி
வேஷத்தில் வஸந்த மாளிகையில் வந்திருந்தாரென்றும்,
குந்தவி தேவிக்கும் அவருக்கும் காதல் உண்டாகிக்
கல்யாணம் நடக்கப் போகிறதென்றும் இதனால் உறையூரும்
காஞ்சியும் நிரந்தர உறவு கொள்ளப் போகிறதென்றும் சிலர்
சொன்னார்கள். வேறு சிலர் இதை மறுத்து, ''தேசப் பிரஷ்டத்
தண்டனைக்குள்ளான இளவரசரைச் சக்கரவர்த்தி விசாரணை செய்து
பொதுஜன அபிப்பிராயத்தையொட்டித் தீர்ப்புக்
கூறப்போகிறார்?'' என்றார்கள். நாலு நாளைக்கு முன்னால்,
அமாவாசை இரவில், கொல்லி மலைச்சாரலில் நடந்த
சம்பவங்களைப் பற்றியும், மாரப்ப பூபதியின் மரணத்தைப்
பற்றியும் ஜனங்கள் கூட்டியும் குறைத்தும் பலவாறாகப்
பேசிக் கொண்டார்கள். பொன்னனும் வள்ளியும் அன்று உறையூர்
வீதிகளின் வழியாக வந்த போது, ஆங்காங்கே ஜனங்கள் அவர்களை
நிறுத்தி, ''பொன்னா! இன்று என்ன நடக்கப் போகிறது?''
என்று விசாரித்தார்கள். பொன்னனோ, தலையை ஒரே அசைப்பாக
அசைத்து, ''எனக்கு ஒன்றும் தெரியாது. சாயங்காலமானால்,
தானே எல்லாம் வெளியாகிறது. ஏன் அவசரபடுகிறீர்கள்?''
என்றான். வள்ளியை அழைத்துக் கேட்ட பெண் பிள்ளைகளிடம்
வள்ளியும் அதே மாதிரிதான் மறுமொழி சொன்னாள்.
பொன்னனுக்கும், வள்ளிக்கும் அன்று இருந்த
கிராக்கிக்கும் அவர்களுக்கு அன்று ஏற்பட்டிருந்த
பெருமைக்கும் அளவேயில்லை.
தேவலோகத்தில் தேவேந்திரனுடைய சபை கூடியிருப்பதைப்
பார்த்தவர்கள் யாரும் திரும்பி வந்து நமக்கு அந்தச்
சபையைப்பற்றிக் கூறியது கிடையாது. ஆனால் அன்று
உறையூரில் கூடிய மாமல்ல நரசிம்ம சக்கரவர்த்தியின்
சபையைப் பார்த்தவர்கள், ''தேவேந்திரனுடைய சபை
கிட்டத்தட்ட இந்த மாதிரிதான் இருக்க வேண்டும்!'' என்று
ஏகமனதாக முடிவு கட்டினார்கள். அவ்வளவு விமரிசையாக
அலங்கரிக்கப்பட்டிருந்த சபாமண்டபத்தில் சபை கூடிற்று.
குறிப்பிட்ட நேரத்திற்குள் தேவேந்திரனைத் தவிர
மற்றவர்கள் எல்லாரும் வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்து
விட்டார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனத்துக்கு ஒரு
பக்கத்தில், வசிஷ்டரையும் வாமதேவரையும்போல்,
சிவனடியாரும் சிறுத்தொண்டரும் வீற்றிருந்தார்கள்.
சிம்மாசனத்தின் மற்றொரு பக்கத்தில் சக்கரவர்த்தியின்
குமாரன் மகேந்திரனும், குமாரி குந்தவியும்
அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அடுத்தாற்போல்
அருள்மொழித்தேவியும் சிறுத் தொண்டரின் தர்ம பத்தினி
திருவெண்காட்டு நங்கையும் காணப்பட்டனர். அவர்களுக்கு
மத்தியில், சிறுத்தொண்டரின் அருமைப் புதல்வன்
சீராளதேவன் உட்கார்ந்து, அதிசயத்தினால் விரிந்த
கண்களினால் நாலாபுறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்
கொண்டிருந்தான். இவர்களுக்குப் பின்னால் பொன்னனும்
வள்ளியும் அடக்க ஒடுக்கத்துடன் நின்று
கொண்டிருந்தார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனத்துக்கு
நேர் எதிரே, சற்றுத் தூரத்தில், பல்லவ சேனாபதியும்
இன்னும் சில பல்லவ வீரர்களும் சூழ்ந்திருக்க விக்கிரமன்
கம்பீரமாகத் தலை நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான்.
குந்தவி இருந்த பக்கம் பார்க்கக் கூடாதென்று அவன்
எவ்வளவோ பிடிவாதமாக மனத்தை உறுதிப்படுத்தி வைத்துக்
கொண்டிருந் தானென்றாலும் சில சமயம் அவனை அறியாமலே
அவனுடைய கண்கள் அந்தப் பக்கம் நோக்கின. அதே சமயத்தில்
குந்தவியும் தன்னை மீறிய ஆவலினால் விக்கிரமனைப்
பார்க்கவும், இருவரும திடுக்கிட்டுத் தங்களுடைய மனஉறுதி
குலைந்ததற்காக வெட்கப்பட்டுத் தலைகுனிய
வேண்டியதாயிருந்தது.
தொடரும்... |