சுஜாதா
முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது 'நைலான் கயிறு'
தொடர்கதையின் மூலமாகத்தான். அதுவரையிலும் துப்பறியும்
கதைப் பக்கம் அவ்வளவாக யாரும் சென்றதில்லை. தமிழ்வாணன்
நிறைய 'சங்கர்லால்' கதைகளை எழுதியிருக்கிறார். பி.டி.
சாமி எழுதுவார். தமிழ்வாணன், பி.டி.சாமி போன்றவர்களின்
கதைகளில் துப்பறியும் கதை என்று சொல்லிக் கொண்டாலும்
துப்பறியும் கூறுகள் கம்மிதான்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் சுஜாதா ஒரு புதுவரவாக
தமிழ் தொடர் உலகத்தில் அடியெடுத்து வைத்தார். இவரின் 'அனிதா
இளம் மனைவி'யில்தான் முதன்முதலில் கணேஷ் என்கிற
வழக்கறிஞர் கதாபாத்திரம் அறிமுகமாகியது. பின்னர் வந்த
'ப்ரியா'வில்தான் முதன்முதலில் வசந்த் அறிமுகமானார்.
சொற்சிக்கனம் என்றாலும் கருத்துருவை முழுமையாகக்
கண்முன் கொண்டு நிறுத்தும் சாமர்த்தியம், மெலிதான
அங்கத நகைச்சுவை, அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆவலைத்
தூண்டும்விதத்தில் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு
இவை சுஜாதாவின் தனிச் சிறப்பு.
இளமை ததும்பும் விவரணைகள், காலப்போக்கை அனுசரித்த
நோக்கு, மிளிரும் படிப்பின் வீச்சு இவற்றால் இளைஞர்களை
இவர் ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. குறிப்பாக சிறுகதைகளின்
வடிவமைப்பை இவர் துல்லியமாகக் கையாண்ட முறையில்
தனக்கெனத் தனியாக ஒரு வாசகர் வட்டத்தை மிகவும் எளிதாக
இவரால் உருவாக்க முடிந்தது. இவர் கையாளும் மொழி மிகவும்
வசீகரமானது. இதைப் பற்றி இவரைக் கேட்டபோது, 'நான்
ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதுகிறேன்' என்று
கூறியதாகப் பிரபலமாகப் பேசிக் கொண்டார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் சுஜாதா தொடர் இல்லாமல் வெகுஜன
சஞ்சிகை விற்காது என்கிற நிலை வந்தது. இவரே
நகைச்சுவையாக, ''நான் வண்ணான் கணக்கைக் கொடுத்தால்கூட
அதைப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறார்கள்' என்றார்.
அதை மெய்ப்பிக்கும் விதமாகவோ என்னவோ சாவி தன்
பத்திரிக்கையில் சுஜாதாவின் வண்ணான் கணக்கை அவரின்
கையெழுத்திலேயே வெளியிட்டார்.
ஒரு பக்கம் துப்பறியும் தொடர்கள், கணையாழியின்
கடைசிப் பக்கக் கட்டுரைகள், கல்கியில் விஞஞானச்
சிறுகதைகள், 'குருப்பிரசாத்தின் 'கடைசி தினம்' போன்ற
வித்தியாசமான சமூகக் குறுநாவல்கள் என்று பரந்துபட்ட
தளத்தில் இயங்கிய இவரைக் கண்டு மூக்கில் விரல்
வைக்காதவர்கள் இல்லை. நகைச்சுவைக் கட்டுரைகள், மரபுக்
கவிதைகள் போன்றவற்றையும் விட்டு வைக்கவில்லை இவர். ஒரு
எழுத்தாளனுக்கு இவ்வளவும் சாத்தியமா என்கிற பிரமிப்பு
ஏற்படுகிறது. நிறையப் படிக்கிற பழக்கம், படித்தத்தை
கிரகித்து அப்படியே நினைவில் பதிந்து கொள்ளும் திறன்,
எதையும் தள்ளாமல் படிக்கின்ற ஒரு திறந்த போக்கு இவரிடம்
இருந்ததால் மட்டுமே இவ்வளவு பரந்துபட்ட வீச்ச
இவருக்குச் சாத்தியமாயிற்று என்று தோன்றுகிறது.
சிறுகதையில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால்,
'எல்டொராடோ ' என்கிற கதையைக் குறிப்பிட்டுச் சொல்ல
வேண்டும். எதையோ தேடி வீட்டை விட்டு ஓடிப் போகும் மகன்
தகப்பன் சாகுந்தருவாயில் வருகிறான். தந்தைக்கும்
மகனுக்கும் உள்ள நுட்பமான உறவைத் துல்லியமாகப் பதிவு
செய்த கதை இது.
கட்டுரை என்றால் ஏராளமான உதாரணங்கள் காட்ட
முடியும். இவர் தந்தையார் இறந்த போது அவருக்கு
அஞ்சலியாக இவர் எழுதிய கட்டுரையைக் குறிப்பிடலாம்.
அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு உணர்ச்சி வசப்பட்டு,
நிறைய பேர் இவருக்குக் கடிதம் எழுதினார்களாம்.
இதே போல் நகைச்சுவையாக இவர் எழுதிய சிறுவர்கள்
பற்றிய '...சாப்டவுடன் ப்ளேட்டெடுப்பாய்' என்கிற
கவிதையும் 'வேண்டாம்' என்று முடியும் ஆசிரியப்பாவும்
இன்றளவும் ரசிக்கப்படுகின்றன.
படிப்பாளி என்றாலும் உலக அனுபவங்களில் தோயாத
எழுத்து என்று ஆரம்பித்த இவர் வயது ஆக ஆகக் 'கற்றதும்
பெற்றதும்' என்கிற அனுபவப் பதிவுகளை எழுதும் அளவிற்கு
உயர்ந்த ரசவாதம் மிகவும் சுவாராசியமானது. இவருக்கு
வயது ஏற ஏற கூடிக்கொண்டே போன படிப்புடன் அனுபவப்
பகிர்களும் ச்ர்ந்து கொண்டது. அவை இவரை ஒரு தரமான
எழுத்தாளராக உருவாக்கியது. மனிதர்களைப் பற்றி இவர்
எழுதிய 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' என்கிற சொற்சித்திரம்
ஒன்றே இதற்குச் சாட்டி எனலாம்.
மனித மனங்களின் குணாதிசயப் போக்குகளையும் அவற்றில்
முரண்பாடுகளையும் மிகவும் துல்லியமாக இக்கட்டுரைகளில்
பதிவு செய்திருந்தார் இவர். ஒன்றிரண்டு கட்டுரைகளை
நீக்கிவிட்டுப் பார்த்தால் உலக வரிசைகளுள் சேர்க்க
வேண்டியது இத்தொகுதி.
விஞ்ஞானத் தொடரான' என் இனிய இயந்திரா' பெரும்
வரவேற்பைப் பெற்றது. இதன் வரவேற்பைத் தொடர்ந்து
'மீண்டும் ஜீனோ' என்கிற நவால்களில் இடம் பெற்ற ஜூனோ
என்கிற இயந்திர நாய் கதாபாத்திரத்துக்காகப் பைத்தியம்
போல் மீண்டும் மீண்டும் இந்நாவல்களைப் படித்தார்கள்
வாசகர்கள். இதை இப்படிப் பார்க்கும் போது கல்கியின்
'பொன்னியின் செல்வனுடன்' தான் ஒப்பிடத் தோன்றுகிறது.
இதே சந்தர்ப்பத்தில் 'பதவிக்காக' என்று ஒரு நாவல்
எழுதினார். அந்நாவலில் இவர் குறிப்பிட்டிருந்த அனைத்து
அரசியல் நிகழ்வுகளும் பின்னாளில் அப்படியே அரங்கேறின.
இவற்றினெல்லாவற்றினூடே கடவுள் குறித்த இவர்
சிந்தனைகளை நாலாயிர திவ்ய பிரபந்தம், உபநிடதங்கள் இவை
குறித்த விஷயங்களை மிகவும் எளிமையாக எடுத்துரைத்தது
வாசகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை வெகுஜனப்
பத்திரிகைகளில் எழுதிப் பிரபலமாகிறவர்கள் பெரிய
எழுத்தாளர்களாய் அங்கீகரிக்கப்படுவதில்லை எ ன்கிற
கசப்பான உண்மைக்கு சுஜாதாவே சான்று. வெகுஜன
பத்திரிகைகள் மட்டுமல்லாது சிறு பத்திரிகைகளிலும்
முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுதிக் குவித்த
இவருக்கு சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகள் எந்த
விருதும் வழங்கவில்லை. அறுபத்து மூவர் உற்சவத்தில்
வழங்கப்படுகிற நீர்மோர் போன்று வழங்கப் படுகிற கலைமாமணி
விருது மட்டும்தான் இவருக்குக் கிடைத்த விருது.
இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாது எழுதிக்
குவித்த இவர் எப்படிப்பட்டவர்? 'கஷ்கத்தில்
வியர்த்திருந்தது' என்று கொஞ்சம் ஆபாசம்; 'துப்பறியும்
நாவல்களில் விரவித் தெளித்த கொலைகள்'; வைணவம் தவிர்த்த
இதர மத நம்பிக்கைகளில் லேசான காழ்ப்பு, வழிவழியாக
இருந்து வரும் அனுபவ நம்பிக்கைகள் மற்றும் பழக்க
வழக்கங்களின் மீது எள்ளல், விமர்சனத்தை நிராகரிக்கும்
போக்கும் இவையெல்லாம் இருந்தும் இவையெல்லாவற்றையும்
புரிந்து கொண்டு தமிழ் வாசகர்கள் இவரைத் தலை மேல்
வைத்துக் கொண்டு கொண்டாடினார்கள்.
ஏராளமாக எழுதியதும், படித்ததை வினியோகித்ததும் தான்
இவர் வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகிறது. முப்பது
வருடங்களுக்கும் மேலாக எழுதிக் குவித்த இயந்திரம்
ஓய்ந்துவிட்டது. இதுபோல் எழுத இனி எவர் வரப் போகிறார்
என்கிற ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழ்
வாசகர் வட்டம். |