தமிழகத்தின்
தெற்கே அமைந்துள்ளது கும்பகோணம். கும்பகோணத்திலிருந்து
சென்னை செல்லும் மார்க்கத்தில் சுமார் 17 கிமீ
தூரத்தில் உள்ளது திருப்பபனந்தான் எனும் ஊர். இவ்வூரின்
நடுவில் அமைந்துள்ள அருள்மிகு செஞ்சடையப்பர்
திருக்கோயில். இக்கோயிலுக்கு செல்ல
கும்பகோணத்திலிருந்து நிறைய பேருந்து வசதி உள்ளது.
இத்திருத்தலத்தில் குடிக்கொண்டிருக்கிறார்
செஞ்சடையப்பர். இவருக்கு அருண ஜடேச்வரர், தாலவனேச்வரர்
என்ற பெயர்களும் உண்டு. தாலவனேச்வரி, பிருகந்நாயகி,
பெரிய நாயகி என்று பல பெயர்களில் இங்கு அம்மன்
அழைக்கப்படுகிறார்.
ோயில் அமைப்பு
ஊரின் நடுவில் மேற்கு நோக்கியமைந்துள்ள பெரிய
கோயிலின் மேற்கில் அமைந்துள்ளது இராஜகோபுரம். கிழக்கில்
ஒரு கோபுரம் உட்கோபுரங்கள் விமானங்கள் உள்ளன. அழகான
நீண்ட மதில்கள் உள்ளன. இராஜ கோபுரம் 9 நிலைகளுடனும் பல
அழகான கதை சிற்பங்களுடனம் வானளாவி நிற்கின்றது.
கோபுரத்தைக் கடந்து உட்சென்றதும் பரந்த முன்னெளி
இடப்பக்கம் நாகதீர்த்தக் குளம், திருமாளகைக் பத்தி
மண்டபங்களுடன் அழகுற விளங்குகிறது. வடகிழக்கில்
கிருஷ்ணேச்வர்ர் வடமேற்கில் நாக கன்னியர் உருவச்
சிலைகள் உள்ளன. முன்வெளியின் நடுவில் நந்தி, பலிபீடம்,
கொடிமரம் நந்தி உள்ளன.
அடுத்துள்ளது ஐந்து நிலைக்கோபுரவாயில். உள்சென்றதும்
பதினாறு கால் மண்டபம். அடுத்து கோயிலின் முன் மண்டபம்
தென்வடவாக நீண்ட செவ்வகமாக அமைந்துள்ளது. இங்கு
விநாயகர் குங்கிலியக் கலய நாயனார் சன்னதிகள் உள்ளன.
அலங்கார மண்டபத் தூண்களில் பல சிற்பங்களும், மண்டபக்
கூரையில் தாடகையம்மை, குங்கிலியக் கலய நாயனார் புராண
நிகழ்ச்சிகள் ஒவியங்களாகவும் மிக்க எழிலுடன்
காணப்படுகின்றன. அர்த்தமண்டப வாயிலில் துவார பாலகர்கள்
காவல் புரிகின்றனர். கருவறையில் இறைவன் லிங்கத்
திருஉருவில் காட்சியளிக்கின்றார். உட்திருச்சுற்றில்
சுப்பிரமணியர், நடராஜர், லட்சுமி, முத்துக்குமாரசுவாமி,
பஞ்சபூதங்கள், பைரவர், சூரியன், அறுபத்து மூவர், சப்த
கன்னியர், விநாயகர் சன்னதி போன்றவைகள் அமைந்துள்ளன.
கருவறை மாடங்களின் வடபுறம் துர்க்கை, தென்புறம்
தட்சிணாமூர்த்தி, வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னதிகளும்
அமைந்துள்ளன.
கோயிலின் வலப்பக்கம் உள்ளது ஒருவாயில். அந்த
வாயிலின் வழியாக சென்றால் அம்மன் சன்னதியை
அடைந்துவிடலாம். அங்கு முன் மண்டபம் அர்த்த மண்டபம்
முதலியவற்றுடன் அமைந்துள்ளது. பெரியநாயகியம்மன்
நாற்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிக்
பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அவரது அருகில் உற்சவ
அம்பாள் சன்னதியுள்ளது. கிழக்கு கோபுர வாயிலின் அருகில்
அதிகளவில் பனங்குருதுகள் வளர்ந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
தலத்தில் நிகழ்ந்த புராண நிகழ்ச்சிகள்
இத்தலத்தில் பல புராண நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக
கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று தாடகை என்ற ஓர் அசுர
குலமாது (இராமாயணத்தில் வரும் தாடகை அல்ல)
சிவபெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டவள். அவன் குழந்தை
வரம் வேண்டி நாள்தோறும் இறைவனை மலர்களால் பூஜித்து
வழிப்பட்டு வந்தாள்.
இந்நிலையில் தாடகையின் பக்தியை சோதித்து
பார்க்கவிரும்பினார் இறைவன். தாடகை சிவலிங்கத்திற்கு
மாலை சூட முயன்றபோது அவரது ஆடையை இறைவன் நெகிழச்
செய்தார். தாடகை தன் ஆடையை முழங்கையால் இடுக்கிக்
கொண்டு தம் மாலையை சிவலிங்கத்திற்கு அணிவிக்க முயன்றார்.
ஆனால் அவரால் மாலையை சிவலிங்கத்திற்கு அணிய
முடியவில்லந. உடனே தாடகை சிவபெருமானிடம் அம்மாலையை
ஏற்றருளுமாறு வேண்டிக்கொண்டாள். சிவனும் தாடகையின்
கோரிக்கையை ஏற்று அவளது பக்கம் தன்னை வளைத்து கொடுக்க,
அம்மாலையை சிவனுக்கு அணிவித்தாள் தாடகை. மேலும்
தாடகையின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அவருக்கு
காட்சியளித்தது மட்டுமல்லாமல் அவள் கேட்ட வரங்களையும்
தந்து அருளினார். தாடகையின் விருப்பத்திற்கிணங்க
இத்தலம் தாடகையீச்வர எனவும் வழங்கப்பெற்றது,
இதில் ஆச்சர்யமானவிஷயம் என்னவென்றால் தாடகைக்காக
வளர்ந்த சிவலிங்கம் அதற்குப் பின்பு நிமிராமலேயே
காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஒரு
காலத்தில் சோழமன்னன் அம்முடியை நிமர்த்தவிழைந்து,
பணியாட்கள், குதிரைகள், யானைகள் முதலியவற்றினால் கட்டி
இழுத்தும் சிவலிங்கத்தை நிமரச் செய்ய முடியவில்லை
என்பது முக்கியமானதாகும்.
இந்நிநலையில் திருக்கடவூர் என்ற ஊரில் வாழ்ந்துக்
கொண்டிருந்த குங்கிலியக் கலய நாயனார் சோழமன்னனின்
விருப்பத்தை அறிந்து, தாமே திருப்பனந்தாளுக்கு சென்று
இறைவனைப் பலவாறு போற்றித் துதித்து இறைவன் முடியினும்,
தம் கழுத்திலும் ஒரு நூலைக் கட்டி இழுத்தார். யானைகள்,
குதிரைகள் பணியாட்கள் என்று சேர்ந்து கட்டி
இழுத்தப்போது நிமிராத சிவலிங்கம் குங்கிலியக் கலய
நாயனார் நூலில் கட்டி இழுத்தப்போது நிமிர்ந்தது.
ஆச்சர்யத்தில் சோழ மன்னனும், ஊர் மக்களும் திகைத்தனர்.
நாயனாரை வணங்கினர். நாயனாரின் பெருமையை உலகத்திற்கு
உணர்த்தவே இறைவன் இப்படி ஓர் நாடகத்தை நடத்தினார்.
பின்னர் நாயனார் இறைவனுக்காக ஆவுடையார் செய்து
லிங்கத்தைப் பொருத்தியதும், நாயனாரின் இறந்த மகனை நாக
கன்னிகைத் திருக்குளத்தில் நீராட்டி உயிர்ப்பிழைக்க
வைத்ததும் இத்திருத்தலத்தில் நடந்த அற்புதமான
நிகழ்வுகள். மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும்
இக்கோயிலில் உள்ள பதினாறு கால் மண்டபத் தூண்களில்
சிற்பங்களாக வடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்புகள்
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான குங்கிலயக்
கலய நாயனாரின் பெருமையை சிவபெருமான் தன் திருவிளையாடல்
மூலம் உலகறிய செய்த பெருமையை கொண்டது இத்திருத்தலம்.
இத்திருத்தலத்திற்கு பனைமரம் தலமரமானதால்
திருப்பனந்தான் என்றும் பெயரைப் பெற்றது. திருஞான
சம்பந்தர் மற்றும் ஐயடிகள் காடவர் கோன் பாடிப் பரவிய
திருத்தலம் என்ற பெருமையும், புராணங்களும் வரலாறுகளும்
கலந்து மணக்கும் பழம்பதி கோயிலின் பெயர் தாடகேச்சரம்
என்றும் சிறப்பை பெற்று விளங்குகிறது. திருஞான
சம்பந்தர் தம் பதிகம் முழுவதும் தீவினைகளைத் தொலைக்க
திருப்பனந்தாளைச் சேர்மமின் என்று கூறியது சிறப்பு. |