தழிழகத்தின்
தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது அன்னசாகரம் என்றொரு
அழகிய சிற்றூர். இச்சிற்றூரில் அமைந்துள்ளது அருள்மிகு
சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில். இத்திருக்கோயில்
600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.தர்மபுரி நகரிலிருந்து
சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இவ்வூருக்கு செல்ல
பேருந்து வசதிகள் உண்டு.
கடந்த 1968ஆம் ஆண்டு இத்திருகோயிலுக்கு
கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் சுமார் 40
ஆண்டுகள் கழித்து அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி
திருக்கோவில் நாஜகோபுர நூதனஆலய அஷ்டபந்தன மகா
கும்பாபிஷேகம் கடந்த 20ம் தேதி மிகப்பெரிய அளவில்
நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கான விழா கடந்த 17ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை
நடைபெற்றது. விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக கடந்த
வியாழக்கிழமை மாலை 5மணிக்கு கணபதி பூஜை, எஜமான
சங்கல்பம், கணபதி ஓமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி,
கிராம சாந்தி, ரக்ஷோண ஓமம், மகா பூர்ணாகுதி மற்றும்
மகாதீபாரதணை ஆகியவை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை காலை
7லிருந்து 10 மணிக்குள் விநாயகர் பூஜை, கணபதி ஓமம்,
நவக்கிரக ஓமம், கோ பூஜை, கஜ பூஜை, தனபூஜை, திரவிய ஓமம்,
பூர்ணகுதி மற்றும் தீபாரதனை ஆகியவையும் நடைபெற்றன.
அன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பல்வேறு விசேஷ பூஜைகளும்
வழிபாடுகளும் நடைபெற்றன.
மறுநாள் சனிக்கிழமை காலை 8 மணிக்கு விசேசந்தி
ஓமத்தில் தொடங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டாம் கால
யாக பூஜை, ஓமம் பூர்ணாகுதி, தீபாரதனை, கோபுரத்தில்
கலசம் வைத்தல், புதிய மூர்த்திகளுக்கு ஜலவாசம், தனவாசம்,
சயானவாசம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று மாலை
மூன்றாம் கால யாக பூஜை, ஓமம், பூர்ணாகுதி மற்றும்
தீபாரதனை போன்றவைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அன்று இரவு மூலவரான சுப்பிரமணியர் மற்றும் வள்ளி
தெய்வானை சுவாமிகளுக்கு எத்திராஸ்தாபனம் மற்றும்
அஷ்டபந்தனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மூன்று நாள் நிகழ்ச்சிகளுக்கு பின்பு நான்காம் நாள்
முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் அன்று அதிகாலை
4 மணியிலிருந்து 6 மணிக்குள் நடைபெற்றது
குறிப்பிடத்தக்கது. முன்னதாக அன்று நான்காம்கால யாகபூஜை
மற்றும் வினாயகர் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம்
ஆகியவை காலை 4 மணிக்கு ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள்
கும்ப லக்கினத்தில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி
மற்றும் நூதன ராஜகோபுரம் பரிவார மூர்த்திகளுக்கும் ஆலய
அஷ்டபந்தன திருகுடம்முழுக்கு மகா கும்பாபிஷேக விழா
நடைபெற்றது.
அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுற்றுப்புற
ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தது சிறப்பு.
மேலும் அன்று விழாவிற்கு வந்திருந்த அனைத்து
பக்தர்களுக்கும் அன்னசாகரத்தில் அமைந்துள்ள செங்குந்தர்
திருமண மண்டபத்தில் அன்னதானம் கோவில் நிர்வாகத்தினரால்
அளிக்கப்பட்டது. இதற்கிடையில் அன்று பகல் மகா தீபாராதனை
நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அன்று இரவு சிவசுப்பிரமணிய சுவாமி மற்றும்
வள்ளிதெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும் பின்னர்
திருவீதி உலாவும் நடைபெற, பக்தர்கள் பரவசத்துடன்
சுவாமியை தரிசனம் செய்தனர். மகா கும்பாபிஷேகத்தை
முன்னிட்டு அன்னசாகரத்திற்கு சிறப்பு பேருந்துகள்
இயக்கப்பட்டது. |